Tuesday, 6 September 2016

நவீன உலகம் சிறு கதை




                   
                   பிறருக்கு உதவி செய் , நண்பர்களை வளர்த்துக்கொள் போன்ற நல்ல அறிவுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவன் ராபர்ட். பெற்றோர்கள் கூறியவாறே அவனும் தன் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களுக்கு உதவிவந்தான். அவன் பள்ளி வளாகத்திலுரிந்த ஆலய வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் கால் ஊனமுற்ற சிறுவனுடன் நன்றாக பழகி வந்தான். அந்த சிறுவன் ராபர்டின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டான். ஒரு நாள் அந்த ஆலயம் வழியாக வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் மீது மோதியது. கால் நன்றாக இருந்து இருந்தால் அவன் அதிலிருந்து ஓடியிருப்பான். தனது குறைபாடுள்ள கால்களால் அவனால் ஓட முடியவில்லை. பேருந்து அவன் மீது மோத அவன் இறந்துவிட்டான். இதனை பார்த்து கொண்டிருந்த ராபர்ட் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
    
             காலங்கள் உருண்டோடின. ராபர்ட் வளர்ந்தான். கல்லூரியிலே தமிழ்துறை பயின்று வந்தான். வகுப்பிலே சிறந்த மாணவனாக கருதப்பட்ட ராபர்ட்டிற்கு இரவு வந்தாலே நேருடலாகவே இருக்கும். தனிமையில் மிகவும் வாடினான். கல்லூரியிலே பல போட்டிகளில் சாதனை படைத்தாலும், அவனது நெருடல் அவனில் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனது எண்ணங்கள் அந்த கால் ஊனமுற்ற சிறுவனை பற்றியே இருந்தது. அவனுக்கு கால் இருந்திருந்தால் அந்த விபத்திலிருந்து தப்பித்திருந்திருப்பானே என்று எண்ணினான். தனது நினைவுகளை, எண்ணங்களை கல்லூரிக்கு இரயில் வந்து கொண்டிருந்த போது தன் நண்பனிடம் கூறினான். நண்பனின் ஆறுதலான வார்த்தைகள் அவனை அவன் மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கவில்லை.

               ராபர்ட் அந்த எண்ணங்களை, வருத்தங்களை எப்படி கையாள்வது என்று இணையத்தில் பார்த்து கொண்டிருந்த போது, ராபர்ட்டின் அம்மா அவனுக்கு தொலைப்பேசியிலே அழைத்தார். அவரோ, ராபர்ட் நல்லா இருக்கியா? உன் நண்பர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? என்று வழக்கம் போல பேசிவிட்டு ''உன்கூட இருக்கிறவங்களுக்கு உன்னால் இயன்ற உதவி செய்'' என்று தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.




               நண்பர்கள் பலம் வாய்ந்த ராபர்ட் உடல் குறைவு பெற்றவர்களுக்காக உதவிட ஒரு அமைப்பை உருவாக்கினான். அந்த அமைப்பை விரிவுப்படுத்தினான். அதில் பல இளைஞர்களை, பேராசிரியர்களை சேர்த்தான். அவனது நெருடல்கள் குறைந்து கொண்டே வந்தது. ஒரு முறை அந்த அமைப்பில் பேசிக்கொண்டிருந்த போது அவனுக்குள் எழுந்தது ஒரு ஒளி. அவன் உடல் குறைவடைந்தவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்க போவதாக கூறினான். இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு பேராசிரியரோ அவனிடம், ராபர்ட் நம்மால் இயன்ற பொருளுதவி, உணவு, இருப்பிடம், உடை இவற்றை வழங்கி வருகிறோம். இயந்திரங்களை எப்படி நம்மால் உருவாக்க இயலும் என்றார். அதற்கு ராபர்ட் என்னால் இயலும். நான் கண்டுபிடிக்கிறேன் என்று இயந்திர கல்வியை கற்க ஆரம்பித்தான்.



                அவனுக்கு தேவையான பொருள்களை உதவிகளை பெற்றிட விளைந்தான். அத்தோடு இந்த அமைப்பையும் இணையத்திலே பதிவேற்றம் செய்து பிரபலமாக்கினான். பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிகள் பெற்றார். அது அவனுக்கு மிகவும் உபயோகமாக அமைந்தது.


                 சில மாதங்களிலே அவனுக்குள் இருந்த உள்ளொளி உந்துதல் அவனை சாதிக்க வைத்தது. ஆம், உடல் குறைவுபட்டவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடித்தான். அவைகள் கால் ஊனமுற்றோருக்கு நடக்க பயன்பட்டது. கை ஊனமுற்றோருக்கு பணி புரிய பயன்பட்டது. அதனால் உடல் குறைவுள்ளோரும் சமுதாயத்தில் நல்ல நிலை பெற்றனர். பிச்சையெடுத்தவர்கள் சுய தொழிலில் இறங்கினார்கள். பல சாதனைகள் புரிந்தனர்.

                 ராபர்ட் அதன் பின் இரவும் பகலும் நெருடல் இன்றி நிம்மதியாக வாழ்ந்தான். அவனது முயற்சியால் நவீன உலகை படைத்தான். அதனால் பலரும் பயன் பெற்றனர். நண்பர்கள் வட்டாரமும் விரிந்தது. கல்லூரியில் பெற்ற விருதுகளை விட, இந்த சாதனை அவனை மெய்மறக்க செய்தது.




              


   நம் எண்ணங்களால் விளைந்த நல் செயல்களால் நவீன உலகம் அமைத்திடல் வேண்டும். அது பிறருக்கும் உதவிடல் வேண்டும்.

Monday, 8 August 2016

அப்பா – திரைவிமர்சனம்


இயக்கம்: சமுத்திரக்கனி
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் ம. நாதன்
படத்தொகுப்பு: ஏ.ம். ரமேஸ்

             பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது…. குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கும் உண்டு… என்பது தான் சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான, தேவையான தமிழ் படம் “ அப்பா ”.
பிறந்தது முதல் விடலை பருவம் வரை குழந்தைகள் சந்திக்கும் சோதனைகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் சமுத்திரக்கனி ஒரு அப்பாவாக நின்று தீர்த்து வைப்பதுடன் குழந்தையின் திறமையை கண்டறிந்து அவனை சாதிக்க வைக்கிறார். இப்புடியும் குழந்தைகளை நல் வழியில் வளர்க்களாம் என வாழ்ந்து காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. நாளு பேருடைய பேச்சுக்காக வாழாமல் திறமைகளை வளர்த்து சாதனை படை என்றும் சமுகத்திற்கு கல்வி விசயத்தில் தன்னால் ஆன கருத்துக்களையும் கொடுத்துள்ளார்.

             தம்பி ராமையாவின் நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தன் ஆசை, கனவு , இலட்சியம் எல்லாவற்றையும் மகன் மீது தினித்து அவனை அமெரிக்க வாழ் மருத்துவராக்க நினைப்பது முதல் இறுதியில் தன் மகனின் நிலை அறிந்ததும் தடுமாறி போகும் தம்பி ராமைய்யா சபாஸ்.
சமுத்திரக்கனிக்கு மகனாக வரும் காக்கா முட்டை விக்னேஸ் , அப்பாவுக்கு ஏத்த பிள்ளையாக வரும் ராகவ் , யுவ லட்சுமி , கேபரில்லா , தன் சாதனையால் உயரம் அடயும் நசாத் என எல்லாரும் அழகு மற்றும் சரியான தேர்வு.

            காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும், அவர்கள் பெற்றோர்களை ஈர்க்கும் முறை பற்றியும் விளக்கும் சவாலான துணிச்சல் சமுத்திரக்கனிக்கு.

           எதிர் பாலினம் பற்றிய புரிதலை மகனுக்கு கொடுக்கும் விதம் அமர்க்களம்.

           திருநங்கை பற்றிய நேர்மறை எண்ணம் சபாஸ்.

           குழந்தை பிறப்பின் போதும், மனைவி திருந்தி வீடு வரும் போதும் செடி நடுகின்ற காட்சியை அமைத்தது அருமை.

            நெஞ்சை நிறைக்கும் வசனங்கள், சமுதாயத்திற்கு சவால்விடும் வசனங்கள் சமுத்திரக்கனியின் படத்தில் சாதனையே.
            எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதையெல்லாம் செய், செல்ல முடியாதத செய்யாத…

           விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில இருப்பபது விவசாயம்தான்…..

           பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருசன் வீட்டுல கவுரமா வாழற வரைக்கும் தான்…

          நீ ( கவர்மெண்ட் ஸ்கூல் மாணவன் ) நாட்டுக்கோழி, தனியார் பள்ளியில் படிக்குற மாணவன் பிராய்லர் கோழி…

         உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள், உயர்த்துங்கள்… போன்ற அர்த்தம் பொதிந்த வசனங்கள் பலே…

         மொத்தத்தில் அப்பா திரைப்படம் ஒரு சாதனை. கடிவாழம் போடப்பட்டிருக்கும் சமுகத்திற்கு தேவையான சாதனை … குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…..

Wednesday, 27 July 2016

gangai river in post office!!!





கங்கை நதி நீர் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்வது – எனும் சட்டம் சற்று மோசமானதாகும்.
    











ஒரு நாட்டை ஆளுகின்ற அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தால் அதில் பல்வேறு சிறப்புக்கள் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு தீமைகள் தலைமுறை தலைமுறையாக வரப்போகிறது என்பதை என்னால் பொறுத்து கொள்ள முடியாததாக இருக்கிறது.


           மதங்களை எதிர்த்தோ, சட்டத்தை எதிர்த்தோ,சடங்கு முறைகளை எதிர்த்தோ எனது கருத்துக்களை கூறவில்லை. ஒரு நல் மனித நேயத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனெனில் கங்கை நதி பற்றியும் அதில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள் பற்றியும் அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு இழிவான சட்டம் கொண்டு வந்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது?

     கங்கை நதி நீரில் ஒரு தடவை மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்க கூடும்.

     2007ம் ஆண்டே கங்கை உலகின் 5 மிகவும் மாசுப்பட்ட நதிகளில் ஒன்றாகவும் மலையளவு நுண்கிருமிகளை உள்ளடக்கியதாகவும் இந்திய அரசு அறிக்கை கூறியள்ளது.

     கான்பூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் ஒரு நாளைக்கு சராசரியாக 5 இலட்சம் கிலோ கலக்கிறது.

     அஸ்தி, அழுகிய பிணம் எல்லாம் கலக்கும் இடம் புனித நதியான கங்கையிலே.

     கங்கை நதியோரம் உள்ள 24 மாவட்டங்களில் வசிக்கும் பெண்களுக்கு பித்தப்பை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

     இவை போன்ற பல பாதிப்புகள் கங்கை நதி நீரால் வரக்கூடியது. இவைப் பற்றி இணையத்தில் படிக்கும் போது என் மனதில் பல கேள்விகள் எழுந்தது.

     கங்கை நதியை சுத்தம் செய்ய 6500 கோடி செலவிடும் சூழலில், பாதிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுக்க சட்டம் போடப்பட்டது எதனால்?

     ஒருவர் தன் வாழ்நாளில் கங்கை நீரில் நீராடியிருக்க வேண்டும் என்ற சில சடங்கு முறைகளை பின்பற்றும் மக்களை அழிக்க இந்த சட்டம் உருவாக்கபட்டதோ?

     அப்படியே கங்கை நதி சுத்தமானது என்றால், அதனை பற்றிய ஆய்வறிக்கையை அதனை சுற்றியுள்ள தொழிற்சாலை கழிவுகள் ,பிணங்கள் எரிப்பது போன்றவற்றை மக்கள் முன்னிலையில் சமர்பிக்க கூடாதா?

     இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்ததன் பின்புலத்தில் இயங்கிய அமைப்புகளின் உள்நோக்கங்களை போல இந்த சட்டத்தின் பின்னும் அரசியல், பிற அமைப்புகளின் உள்நோக்கம் இருக்குமோ?


- போன்ற பல கேள்விகள் என் மனதில் அலைபாய்கிறது. இவை அனைத்திற்கும் எப்போது தீர்வு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. மக்கள் எப்போது இதன் உண்மை நிலையை அறியப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை. சிந்திப்போம்…. செயல்படுவோம்…







Tuesday, 26 July 2016

காட்சி தொடர்பியல் துறையின் தொடக்க விழா

ST.XAVIER’S COLLEGE
THE DEPARTMENT OF VISUAL COMMUNICATION
 ASSOCIATION DAY

தூய சவேரியார் கல்லூரியில் 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காட்சி தொடர்பியல் துறையின் தொடக்க விழா 13.07.2016 அன்று கொண்டாடப்பட்டது. வண்ணமயமாக அருட்தந்தை.மிரண்டா கலையரங்கம் காட்சி தொடர்பியல் மாணவ மாணவிகளால் ஜொலித்தது. விழாவினை முனைவர்.பால சுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். இவர் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிரிட்டோ வின்செண்ட் சே.ச , செயலர் அருட்தந்தை அந்தோணி சாமி, துறைத் தலைவர் அருட்தந்தை இன்பெண்ட் கிங்ஸ்லி சே.ச மற்றும் பேராசிரியர்கள் விழாவினை சிறப்பு பெற வழிவகுத்தனர்.
      விழாவானது துறைத் தலைவர் அருட்தந்தை இன்பெண்ட் கிங்ஸ்லி சே.ச வின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து செயலர் தந்தை அந்தோணி சாமி சே.ச அவர்கள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தலைவர் உரை ஆற்றினார். மாணவர்களின் குறும்பட தொகுப்பினை அடங்கிய குறுந்தகடினை விழாத்தலைவர் முனைவர் பால சுப்பிரமணிய் ராஜா வெளியிட செயலர் தந்தை பெற்றுக்கொண்டார். இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளின் ஆவணப்படம் மற்றும் புகைப்படங்களை முனைவர் பால சுப்பிரமணிய ராஜா வெளியிட கல்லூரி முதல்வர் பெற்றுக்கொண்டார். முதல்வர் அவர்களின் ஆசியுரை மாணாக்கர்களிடையே நல் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. விழாத்தலைவர்களை கெளரவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிக்கு வழிவிடப்பட்டது.
      மூன்றாம் ஆண்டு மாணாக்கர்களின் குறும்பட தொகுப்பு திரையுடப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணக்கர்களின் ஆவணப்படம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு திரையிடப்பட்டது. மூன்றாம் ஆண்டு மாணவரின் கவிதை நயத்தை வெளிப்படுத்தும் விதமாக கவிதை அரங்கேறியது. துறை மாணவ மாணவியர்களின் சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளடக்கிய தொகுப்பு திரையுடப்பட்டது. பலகுரல் மன்னர்களின் நகைச்சுவை விகட விருந்து அளிக்கப்பட்டது. மேலைநாட்டு கலைநயத்தில் துறை மாணவர்களால் நடனம் அரங்கேறியது. தொடர்ந்து துறை மாணவர்களால் சமூக அவலங்களை மையமாக கொண்டு “ பொய் சொன்ன கடிச்சி கொதறிடுவேன்” என்ற நாடகம் அரங்கேறியது. மாணவிகள் ராஜஸ்தான் கலைநயத்தை தங்களின் நடனத்தின் மூலம் வெளிக்காட்டினர்.
      விழாத்தலைவர் முனைவர் பால சுப்பிரமணிய ராஜா அவர்களின் தலைமையுரை மாணவ மாணவிகளிடையே படைப்பாற்றலை பற்றிய கருத்துகளை ஏற்படுத்தியது. மேலும் விழாத்தலைவரின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் மாணவ மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

      துறை மாணவ மாணவியர்களின் இன்னிசை பாடல் கச்சேரி இனிப்பு விருந்தாக அமைந்தது. இரண்டாம் ஆண்டு மாணவரின் நன்றியுரை விழாவின் இறுதிக்கு அழைத்து வந்தது. விழாவினை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் படைப்பாற்றல் திறமையோடு தொகுத்து வழங்கியது சிறப்பாக இருந்தது. விழாவானது தேநீர் விருந்துடன் இனிதே நிறைவேறி இக்கல்வியாண்டில் பல திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Saturday, 23 July 2016

கபாலி திரைவிமர்சனம்

கதை கரு: மலேசிய தமிழ்ர்களுக்காக போரடும் தாதா…
டைரக்டர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஸ் நாரயணன்
கேமரா: முரளி

           மலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலியாக வேலை பார்க்கும் தமிழர்களுக்காக ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்துடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றனர்.

              அங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதைமருந்து கடத்துதல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொருப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துகட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார். அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறத்துபோனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்கின்றனர். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர்.

             25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதைகடத்தல் கும்பல் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருப்பது அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும், குடும்பத்தோடு சேருவதும் மீதிக்கதை.

          1).தமிழர்களை பற்றிய சில வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
          2).படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடியலையும் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
          3).ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், கதை உருவமைப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
          4).துப்பாக்கியை கையாளும் விதம் சில நேரங்களில் நகைச்சுவையாக உள்ளது.
சென்னையில் எடுக்கப்பட்ட பகுதி , ரஜினியின் கதாபாத்திரத்தையே உடைத்துவிட்டது. படத்தை மேலும் தொடர ஒரு நெருடலாகவே இருந்தது.
        5).ஒரு சில நிகழ்வுகளை தவிர, கதை கரு எடுத்துக்காட்டிலே முடிந்துவிட்டது போல இருந்தது. தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதாகவே அமைந்துள்ளது, கபாலி. ஆக மலேசிய தமிழ் மக்களுக்காக போராடி சிறைசென்ற தாதா விடுதலையாகி குடும்பத்தை தேடுகிறார்… என்பதே கதை கரு.

             6).தமிழ் மக்களை காப்பாற்றும் போராட்ட நிகழ்வு அதிகம் வைத்து குடும்ப தேடலை குறைத்திருந்தால் கபாலி வெற்றி பெற்றிருக்கலாம்.

             7).என்னை கேட்டால் கபாலி வெற்றி பெறவில்லை என்றே கூறுவேன். எல்லாம் விளம்பரயுக்தி… மாயை…

              8).கதை கருவே நன்றாக அமையவில்லை. இதற்கு போய் இப்படி ஒரு விளம்பரமா???

              9).நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.